கடிதம்


  • கடிதம்


          தொலைத்தொடர்பு கணிசமான இவ்வுலகில் கடிதம் என்ற வார்த்தை வழக்கொழிந்து போயிருக்கலாம். கடிதம் எழுதுபவர்கள் பாகவதர் காலத்து மனிதன் என்று யாரேனும் எள்ளலாம். அதைப் பற்றிய எந்த பிரக்ஞையோ கவலையோ எனக்கில்லை.
           எனக்கு கடிதம் எழுத மிகவும் பிடிக்கும். காற்றில் கரைந்து போகாத வண்ணம் வார்த்தைகளை காகிதத்தில் சிறைபிடிக்கும் கடிதத் தொடர்பு அலாதியானது.
           சொல்ல நினைத்ததை எல்லாம் வார்த்தைகளில் சொல்லி விடவே முடியாது என்று தெரிந்திருந்தும் எழுதப்படும் வார்த்தைகளின் மேல் அத்தனை அபிமானம் எனக்கு. என் கடிதங்கள் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையுமற்றது.
             அப்படி நான் படித்ததில் என்னை பாதித்த புத்தகங்களில் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த கடிதம் என்ற வலைப்பதிவு.
             அந்த எழுத்தாளர் படிக்க வேண்டும் என்று எந்த பிரியாசையும் நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில் ஒருவேளை அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த கடிதத்தை படித்தாலோ அல்லது அவருக்கு இந்த எழுத்துக்கள் பிடித்திருந்தாலோ ஒரு சிறு புன்னகையோடு கடந்து விட்டால் அதுவே போதுமானதாகத் தோன்றுகிறது.
             கடிதத்தின் முன்னோடியாக பலர் இருந்தாலும் என்னை ஆத்மார்த்தமாய் ஈர்த்த கடிதங்கள் எழுத்தாளர் மு. அவர்களுடையது.
            மூட நம்பிக்கைகளில் பழைய மூடநம்பிக்கைகள் புதிய மூடநம்பிக்கைகள் என்று இனம் பிரித்து காட்டியவர் அவர்.
               'பழைய மூடநம்பிக்கைகள் புராணங்களையும் சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை. புதிய மூடநம்பிக்கைகள் பத்திரிக்கைகளையும் கட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டவை’.
             தன் தம்பிக்கு எழுதும் ஒரு கடிதத்தில் எவ்வளவு வீரியமான எழுத்துக்களை எழுத முடியும் என்று நான் அறிந்தது இவரிடமிருந்துதான்.
            வார்த்தைகள் கைப்பேசியில் வெறும் குறியீடுகளாக சுருங்கிவிட்ட இந்த சூழலில் கடிதங்களின் கைவண்ணத்தை நம்மில் பலரும் மறந்திருக்கலாம். இதோ உங்களோடு என் கடிதப் போக்குவரத்து தொடங்குகிறது. புத்தகங்கள் வாழ்க்கையில் சாட்சியாய் நீட்சியாய் மாறிவிட்ட நிலையில் இக்கடிதங்கள் தானே சிறகுகளை தரித்துக் கொண்டு உங்கள் முற்றங்களில் காத்திருக்கப் போகிறது .
             பிரியம் உள்ளவர்கள் பதில் எழுதுங்கள். அதிகப் பிரியம் உள்ளவர்கள் வசைபாடுங்கள். கடிதத்தைக் கிழித்துப் போடுங்கள். உங்கள் முற்றம் வரை கொண்டு சேர்ப்பது மட்டுமே என் பாடு.
                      அன்பின் எழுத்தாளருக்கு….
                                                          தொடரும்…….

அன்புடன் ஹேமா...

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு