கவிதை
ஒரு நாளை எப்படி தொடங்குவது என்பதை நான் அறிந்ததே இல்லை. எப்படியும் தொடங்கியிருக்கிறேன் மௌனமாக, சிரிப்பாக, அழுகையோடு, ஏதோ நினைவுகளோடு. அழுகை வருவதில்லை பல மரண வீடுகளிலும். மனம் சிரிப்பதில்லை திரையில் வரும் பல நகைச்சுவைகளில். குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கத் தெரிவதில்லை பலவற்றை. பயமுறுத்துகின்றன காலஅட்டவணைகளும் தேர்வு அட்டவணைகளும். தூங்கும் நேர விழிக்கும் நேர ஒழுங்கு என்பதிலோ, இது இப்படித்தான் என்ற இயற்கையற்ற கட்டுகளிலோ எந்த நம்பிக்கையுமில்லை. யாருக்கான முடிவையும் எனக்கான முடிவையுமே நான் அவ்வப்போது எடுப்பதேயில்லை. வெற்று நம்பிக்கைகளுக்காகவும் பாசிசத்திற்காகவும் நான் குரல் கொடுப்பதில்லை. பிரச்சனை நான் யாராக இருக்கிறேன் என்பதிலில்லை. நான் யாராக இருக்க வேண்டும் என்று யாரோ நினைப்பதில்தான்.